திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு போலீஸ் நிலையத்தில் கதறிய 10–ம் வகுப்பு மாணவி…!!
போலீஸ் நிலையத்தில் தனது திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு 10-ம் வகுப்பு மாணவி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் சுதா (வயது15). பிராட்வேயில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் உறவினர் வாலிபருக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து உள்ளனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் திருமணம் செய்ய மாணவி சுதா மறுத்தார். தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து மாணவி தனது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு யோசனை தெரிவித்தனர். இதையடுத்து மாணவி சுதா தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அவர் போலீசாரிடம் கதறி அழுதபடி தனது திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தும்படி கூறினார்.
போலீசார் மாணவியின் பெற்றோரை அழைத்து திருமண ஏற்பாட்டை நிறுத்தும்படி தெரிவித்தனர். மேலும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
Average Rating