திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேர் கைது..!!
திருவண்ணாமலை அருகே நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை அருகே வெறையூர் அலகானந்தல் கிராம மலையடிவாரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் அலகானந்தல் கிராம மலையடிவாரத்தில் சோதனையிட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள அறை ஒன்றில் 4 பேர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து கொண்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் 4 பேரும் அலகானந்தலை சேர்ந்த முருகன் (வயது 35), பாஸ்கர் (26), விஜயகாந்த் (29), அரடாப்பட்டு தமிழ்மணி (35) எனவும், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை விரட்ட வெடிகுண்டுகள் தயாரித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 65 நாட்டு வெடிகுண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வெறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வெறையூர் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating