குடிமக்களின் உயிரை காக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது சரியா…?
ஜேர்மனியில் ’ஸ்மார்ட்போன்’ பயன்படுத்திக்கொண்டு நபர்கள் சாலையில் நடக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலைகளில் நடக்கும்போது செல்போனை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகிறது.
ஆனால், இந்த உயிரிழப்புகளை தடுப்பதற்கு ஜேர்மனியில் உள்ள Augsburg என்ற நகரில் ஒரு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபர்கள் நடக்கும்போது செல்போனை பயன்படுத்துவதால், மேலே உள்ள போக்குவரத்து சிக்னலை பார்க்க தவறுவதால் வாகனங்கள் மோதி உயிரிழக்க நேரிடுகிறது.
குறிப்பாக, தண்டவாளங்களில் செல்லும் ட்ராம் வாகனங்கள் மோதி அதிகளவில் நபர்கள் உயிரிழக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த மேலே கூறிய நகராட்சி அதிகாரிகள் போக்குவரத்து சிக்னலை தரையில் தெரியுமாறு ஒரு வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது, தண்டவாளம் மற்றும் தார் சாலை இணையும் தரைப்பகுதியில் இந்த சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது.செல்போனை பயன்படுத்தியவாறு குணிந்துக்கொண்டு நடந்து வரும் நபர்களின் பார்வைக்கு இந்த சிக்னல் எளிதில் தெரியும்.
இந்த சிக்னல் விளக்கு சிவப்பில் இருந்தால், அங்கு ஒரு ட்ராம் வாகனம் வருகிறது என்றும், மேற்கொண்டு அவர் நடக்காதவாறு எச்சரிக்கை விடுக்கிறது.
இந்த சிக்னல் விளக்கு பச்சை வண்ணத்தில் இருந்தால், ட்ராம் வாகனம் வரவில்லை என்றும் மேற்கொண்டு தொடர்ந்து நடக்கலாம் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
ஆனால், இந்த புதிய நடவடிக்கைக்கு தற்போது எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.அதாவது, ‘சாலையில் நடந்துக்கொண்டு செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை தான் அரசு உணர்த்த வேண்டுமே தவிர, புதிய வசதிகளை உருவாக்கி நபர்கள் செய்யும் தவறை ஊக்கப்படுத்தக் கூடாது’ என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், சிக்னலில் குளறுபடி ஏற்பட்டு ட்ராம் வாகனம் வரும்போது ஒரு நபர் செல்போனை பயன்படுத்திக்கொண்டு தண்டவாளத்தை கடக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், இந்த சிக்னல் விளக்குகள் இரவு நேரத்தில் பயன் தரலாம். ஆனால், பகல் நேரங்களில் இந்த வசதி பயன் தராது’ என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Average Rating