வீட்டு உரிமையாளரை சுட்டு கொன்ற வாடகைதாரர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாடகைதாரருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது.
சுவிஸின் Fribourg Neirivue என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 47 வயதான நபர் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறியுள்ளார்.
இந்த வீட்டில் 69 வயதான உரிமையாளர் மற்றும் அவரது மகன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு வாடகைக்கு குடியிருந்த நபருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த வாடகைதாரர் வீட்டிற்கு திரும்பி தனது துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். இருவரையும் கொல்லாமல் மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் துப்பாக்கியை கொண்டு வந்துள்ளார்.
இந்த சூழலில் துப்பாக்கியை கண்டு அஞ்சிய வீட்டு உரிமையாளர் அங்குள்ள அறைக்கு சென்று பதுங்கியுள்ளார். துப்பாக்கியை கொண்டு வந்த நபர் இருவரையும் மிரட்டுவதற்காக எதேச்சையாக கதவை நோக்கி சுட்டுள்ளார்.
ஆனால், கதவை துளைத்துக்கொண்டு பாய்ந்த குண்டு, உள்ளே தரையில் படுத்திருந்த உரிமையாளர் மீது தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான இறுதி வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. இந்த கொலையை வாடகைதாரர் திட்டமிட்டு செய்யவில்லை என்பது உறுதியானாலும் கூட, ஒரு உயிரிழப்பிற்கு அவர் காரணமாக இருந்துள்ளதால், குற்றம் செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating