லெபனானில் 130 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் ஹிஜ்புல்லாவினரின் அலுவலகம் உள்பட 130 இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. லெபனானின் கிழக்குப் பகுதியிலுள்ள நபாடியே நகரத்திலுள்ள 3 மாடிக் கட்டடத்தை இஸ்ரேல் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கின. இக்கட்டம் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்று லெபனான் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அருகருகே இருந்த இரண்டு வீடுகளில், ஏவுகணைத் தாக்குதலின் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். 4 குழந்தைகள் காயமடைந்தனர்.
நபாடியே அருகிலுள்ள ஃபார் ஜெüஸ் கிராமத்தில் இரண்டு கட்டடங்கள் ஜெட் விமானங்களின் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டன. இக்கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, லெபனான் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.
இஸ்ரேலின் குண்டு மழையால் லெபனானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன.
லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.