கோடையில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும் பானங்கள்…!!
கோடையில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முதன்மையானது போதிய அளவு தண்ணீர் பருகாமல் உடல் வறட்சி அடைவது. இப்படி உடல் வறட்சியானது தீவிரமானால், அதனால் உடலுறுப்புக்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பல உடல்நல கோளாறுகளை சந்திக்கக்கூடும்.
எனவே கோடையில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதோடு, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்களைப் பருக வேண்டும். இங்கு கோடையில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும் பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மோர்
மோர் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன், வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நடுநிலைப்படுத்தி வயிற்று எரிச்சலைக் குறைக்கும் மற்றும் குடலியக்கத்தையும் மேம்படுத்தும்.
இளநீர்
அனைவருக்குமே இளநீரில் இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது என்று தெரியும். எனவே இதனை கோடையில் தினமும் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் தணிவதோடு, உடலின் நீர்ச்சத்தும் பராமரிக்கப்படும்.
கொக்கும் ஜூஸ்
கொக்கும் ஜூஸில் கார்சினோல் என்னும் பொருள் உள்ளது. இது வயிறு கோளாறுகளில் இருந்து விடுதலைத் தரும். மேலும் இந்த ஜூஸ் உடலின் நீர்ச்சத்தையும் சீராக பராமரிக்கும்.
இஞ்சி எலுமிச்சை ஜூஸ்
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாற்றினை நீரில் ஒன்றாக சேர்த்து கலந்து, ப்ளாக் சால்ட், சர்க்கரை, சீரகத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கோடையில் ஏற்படும் வயிற்று கோளாறுகள் குணமாவதோடு, உடல் வறட்சி அடைவதும் தடுக்கப்படும்.
பீட்ரூட் ஜூஸ்
கோடையில் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கலாம். ஆகவே வீட்டில உள்ளோருக்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் கொடுத்து, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
தண்ணீர்
முக்கியமாக குடிக்கும் நீரின் அளவை மட்டும் எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது. குறிப்பாக கோடையில் சாதாரணமாக குடிக்கும் நீரை விட அதிகமாக குடிக்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் உப்பு தண்ணீர்
கோடையில் வயிற்றுப்போக்கு தீவிரமானால், அதனால் உடல் வறட்சி அதிகரிக்கும். இதனைத் தடுக்க நீரில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடித்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, உடலில் நீர்ச்சத்து பராமரிக்கப்பட்டு, உடல் சோர்வு நீங்கும்.
Average Rating