பாகிஸ்தானிடம் 50 அணுகுண்டுகள் உள்ளன: அமெரிக்க பத்திரிகை பகீர் தகவல்
ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தது போல, மிகவும் சக்தி வாய்ந்த 50 அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் இருப்பதாக அமெரிக்க பத்திரிகை தி நேச்சர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் புதிய அணு உலை ஒன்றை கட்டி வருவதாக அண்மையில் சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதோடு குஷாப் அணு உலையை பாகிஸ்தான் 20 மடங்கு மேலும் சக்தி வாய்ந்ததாக ஆக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
குஷாப் அணு உலைப்படங்களை அமெரிக்க ராக்கெட்டுகள் படம் பிடித்து அனுப்பின. இதையடுத்து பதறிப்போன அமெரிக்கா அணு உலை கட்டி வருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்த பின்னணியில் பாகிஸ்தான் வசம் அதி பயங்கரமான 50 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி நேச்சர் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களை அழித்தது போன்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இவை என்றும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கட்டி வரும் புதிய அணு உலை குறித்தும் பகீர் தகவல்களை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அந்த உலையை மிகப்பெரிய அணு உலை என வர்ணித்துள்ள அந்த பத்திரிகை இந்த அணு உலையில் 500 க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என சுட்டிக்காட்டியது.
இந்த உலையில் யுரேனியத்திற்கு பதிலாக புளூட்டோனியத்தை பயன்படுத்தவும் பாக்., முடிவு செய்துள்ளது. ஒரு அணுகுண்டை தயாரிக்க 20 கி.கி. யுரேனியம் தேவை. ஆனால் புளூட்டோனியம் 5 கி.கி. இருந்தால் போதும் என்பதால் பணத்தை அள்ளி விட்டு புளூட்டோனியம் குண்டுகளை பாகிஸ்தான் தயாரித்து வருவதாக அமெரிக்க பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
புளூட்டோனியம் குண்டுகளோடு மிகவும் பயங்கர, கற்பனைக்கும் எட்டாத, சேதத்தை விளைவிக்கும் ஹைட்ரஜன் குண்டுகளையும் தயாரிக்க பாகிஸ்தான் மும்முரமாக இறங்கியுளளது. அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த ஹைட்ரஜன் குண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.