சிரியாவில் ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி…!!
சிரியா தலைநகர் டமஸ்கஸின் தெற்கில் உள்ள சய்யிடா ஜெயினப் என்ற பகுதியில் உள்ள ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஷியா பிரிவு வழிபாட்டு தளத்திற்கு செல்வதற்கான வழி அமைந்துள்ள அல்-தியபியாஹ் என்ற பகுதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “சோதனைச் சாவடியில் நாங்கள் அந்த காரினை நிறுத்தினோம். காரினை சோதனை செய்வதற்கு தொடங்கிய உடன் அவர்கள் காரை வெடிக்கச் செய்தனர். இதில் எங்களுடைய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.
வழிப்பாட்டு தளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த ஆண்டில் மட்டும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலமுறை தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating