தைவானில் 15 பேர் உயிர்ப்பலிக்கு காரணமான உல்லாச தண்ணீர் பூங்கா அதிபருக்கு 4 ஆண்டு சிறை…!!
தைவான் உல்லாச தண்ணீர் பூங்கால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியான சம்பவத்தில் பூங்காவின் அதிபர் லு சங் சி குற்றவாளி என கோர்ட்டு கண்டு 4 ஆண்டு, 10 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.
தைவான் நாட்டின் தலைநகரமான தைபேயில், புது தைபே பகுதியில் உள்ள ‘பார்மோசா வாட்டர் பார்க்’ என்ற உல்லாச தண்ணீர் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி இரவு சிறப்பு விருந்து ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான வாலிபர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டு ஆடல், பாடல் என குதூகலமாய் இருந்தனர்.
அப்போது கோடை வெப்பத்தை தணித்துக்கொள்வதற்காக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவினர். அப்போது வீசப்பட்ட வண்ணப்பொடி எதிர்பாராத விதமாக வெடித்து தீப்பிடித்தது. 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த இந்த சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உல்லாச தண்ணீர் பூங்காவின் அதிபர் லு சங் சி, மீது வழக்கு தொடரப்பட்டது. தேவையான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல், அசட்டையாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், அவர் குற்றவாளி என கோர்ட்டு கண்டு 4 ஆண்டு, 10 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.
Average Rating