சிரியாவில் மோதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி..!!
சிரியாவில் தடையை மீறி தாக்குதல் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோதல்களில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக தொடர்ந்து 5-வது ஆண்டாக கிளர்ச்சி நீடித்து வந்தது. இந்த நிலையில் அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முயற்சியால் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும் அதை மீறி அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் நடந்த மோதல்களில் 30 பேர் உயிரிழந்தனர். சிரியா அதிபர் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையேயான இந்த மோதல்கள் அலெப்போ நகரில் நடந்தன. இந்த நகரின் பல பகுதிகள் இன்னும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.
இதற்கிடையே, அலெப்போ நகரின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவில் ‘வெள்ளை ஹெல்மெட்டுகள்’ என்று அழைக்கப்படுகிற சிரிய சிவில் பாதுகாப்பு மையத்தின் மீது குண்டுகளும், ஒரு ராக்கெட்டும் வந்து விழுந்ததாகவும், அதில் மீட்பு பணியாளர்கள் 5 பேர் சிக்கி உயிரிழந்ததாகவும், அவர்கள் குறி வைத்து தாக்குதலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலை நடத்தியது ரஷியாவா அல்லது சிரியாவா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Average Rating