கோவை தம்பதிக்கு ரூ.1½ லட்சத்துக்கு குழந்தையை விற்ற தாய்–தந்தை உள்பட 4 பேர் கைது..!!
கேரள மாநிலம் வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் முகம்மது குட்டி (வயது 53). இவரது மனைவி ரங்கத் (36). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் இருந்தான். திடீரென அந்த குழந்தை மாயமானது.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் ரங்கத்திடம் விசாரித்தனர். அவர் குழந்தை காணாமல் போய் விட்டதாக தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு பிறகு அவர் வடக்கஞ்சேரி போலீசில் தனது ஒரு வயது மகன் காணாமல் போய் விட்டதாகவும், அவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் புகார் கூறினார்.
போலீசார் ரங்கத்தின் கணவர் முகம்மது குட்டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும், அவரது மனைவி ரங்கத்தும் சேர்ந்து குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு கோவையைச் சேர்ந்த புரோக்கர் ஜான் சுந்தரிடம் (47) விற்று விட்டு குழந்தை காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து புரோக்கர் ஜான் சுந்தரையும், அவரது கூட்டாளி ஜோதி (37) என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் ரூ.1 லட்சத்துக்கு வாங்கிய குழந்தையை கோவையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், கண்ணம்மாள் தம்பதியினருக்கு ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த தம்பதியினரிடம் இருந்து குழந்தையை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த குழந்தை வடக்கஞ்சேரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தையின் தந்தை முகம்மது குட்டி, தாயார் ரங்கத், புரோக்கர்கள் ஜான்சுந்தர், ஜோதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Average Rating