முல்லைத்தீவில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்: அச்சத்தில் பெற்றோர்…!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
விசுவமடு பாரதி வித்தியாலயத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டு விவசாயத்தை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஐ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் சுமார் 900 மாணவர்கள் வரை கல்வி கற்கின்றனர். பல தடவைகள் பெற்றோர் தம்மிடம் முறையிட்டதாக ரவிகரன் கூறினார்.
இதேவேளை மாந்தை கிழக்கு பாலிநகர் தனியார் மற்றும் அரச காணிகளில் மிகப்பெரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைக்கு சமீபமாக இந்த இராணுவ முகாம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என பெற்றோர் அச்சம் வெளியிட்டுள்ளதாக ரவிகரன் கூறினார்
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் பல்வேறு சிரமங்கள் மத்தியில் கல்வியை தொடரும் மாணவர்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் ரவிகரன் குறிப்பிட்டார்.
Average Rating