கென்யாவில் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி..!!
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்கா நாடான கடந்த இரு தினங்களாக கன மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் அங்கு பல கட்டிடங்கள் இடிந்தன. நிலச்சரிவு காரணமாகவும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தலைநகர் நைரோபியில் நேற்று இரவு 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. போலீசார், தீயணைப்பு படையினர், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரும் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 121 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை நைரோபி துணை கவர்னர் ஜோனாதன் நேரில் பார்வையிட்டார். கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்றும், முறையான திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating