மன்னாரில் அரச போக்குவரத்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்மானம்…!!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதுகுறித்து, மன்னார் அரச பேரூந்து பணியாளர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாக
‘மன்னார் சாலையில் 40 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டு வருவதோடு 300இற்கும் அதிகமான ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். எமது சாலைக்குரிய காணக்காளர் காரியாலயம், நீண்ட காலமாக வவுனியாவில் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் தங்களது சொந்த விடுமுறையில் வவுனியாவுக்குச் சென்று தங்களது சம்பள விபரங்கள், கடன் விபரங்கள், விடுமுறை தொடர்பான பிரச்சினைகள் மேலதிக நேரக்கொடுப்பனவு சம்பந்தமான பிரச்சினைகள் என்பவை குறித்து கேட்டறிய வேண்டியுள்ளது. இதனால் தொழிலாளர்களின் விடுமுறைகள் வீணாகுவதுடன், அவர்கள் மன உழைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
கணக்காளர் காரியாலயம் வவுனியாவில் இயங்கி வருவதால் எமது காப்பாளர்களின் வழிப்பட்டியல்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும், மூன்று மாத காலம் தாமதமாகவே பரிசோதனை செய்யப்பட்டு எமது காப்பாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக காப்பாளர்களினால் விடப்படும் சிறு தவறுகளும் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போவதோடு பல காப்பாளர்கள் வேலை இழக்கவும் நேரிடுகின்றது.
எனவே நாம் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு மன்னார் சாலையினுள் கணக்காளர் காரியாலயத்தை இயங்கச் செய்யுமாறும் தகுதியான கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தி, எதிர்வரும் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரச பேரூந்துப் பணியாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating