கேரளாவில் தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்துக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் 28-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் சட்டக்கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவி என்பதும், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் போல் தலித் மாணவி கொல்லப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இதனிடையே மாணவி கொலை குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டன.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி உம்மன் சாண்டி தெரிவித்தார்.
Average Rating