கரடியனாற்றில் விடுதலைப்புலிகளின் அலுவலகத்தின் மீது விமானத் தாக்குதல்: 8 பேர் பலி
இலங்கையின் கிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று நான்காவது நாளாக தொடர்ந்த விமானத் தாக்குதலின் போது அந்த அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கரடியனாறு மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய இடங்களிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீதே இன்று நண்பகல் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாவும், கரடியனாற்றில் உள்ள தேனகம் கட்டிடத் தொகுதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப் படையின் 2 குண்டு வீச்சு விமானங்கள தமது கட்டுப்பாட்டு பகுதியில், 12 தடவைகள் தாக்குதலை நடத்தியதாகவும், இவற்றில் 2 குண்டுகள் தமது மகாநாட்டு மண்டபம் மற்றும் விருந்தினர் விடுதிகளை உள்ளடக்கிய தேனகம் கட்டிடத் தொகுதியின் விழுந்தமையினால் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட தகவல்களின் படி விடுதலைப் புலிகளின் மாவட்ட மாவீரர் பணிமனை காப்பக பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மாமா மற்றும் ஊரக மேம்பாட்டு பேரவைப் பொறுப்பாளர் அரிஹரன் ஆகியோரும் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிகின்றது
நேற்று முன்தினம், வியாழக்கிழமை, வாகரை கதிரவெளியிலும் இப்படியான விமானத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.