பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு உதவியதால் இளம்பெண் உயிருடன் எரித்து கொலை..!!
பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு உதவி செய்ததாக கூறி இளம்பெண்ணை உயிருடன் எரித்து கொன்ற 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது பெண் அம்பிரீன். இவளது பக்கத்து வீட்டு தோழி சைமா.
இவள் வாலிபர் ஒருவரை காதலித்தாள். இதற்கு அவளது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு அம்பிரீன் உதவி செய்தாள்.
இதற்கிடையே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த விவகாரம் ‘ஜிர்கா’ எனப்படும் மலைவாழ் பஞ்சாயத்து குழுவுக்கு சென்றது. இதில் இடம் பெற்றுள்ள 15 பேர் அதுகுறித்து விசாரித்தனர். விசாரணையில் காதல் ஜோடி திருமணத்துக்கு அம்பிரீன் உதவி செய்தது தெரியவந்தது. உடனே அவளை இழுத்து வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அவளது கழுத்தை நெரித்து மூச்சு திணறடித்தனர்.
பின்னர் அவளுக்கு விஷ ஊசி போட்டனர். அப்படியும் அவர்களின் ஆத்திரம் தீரவில்லை. அம்பிரீனை ஜீப்பில் கட்டி வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்றனர்.
இக்கொடூர சம்பவத்தை கூடி நின்று பார்த்து ரசித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் இளம்பெண் அம்பிரீனை உயிருடன் எரித்து கொன்ற மலைவாழ் பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அபோதாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில் இது போன்ற கவுரவ கொலைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 1,100 பெண்கள் அவர்களது உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating