சிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் குண்டு வீச்சு: 28 பேர் பலி…!!
சிரியாவில் அகதிகள் முகாம் மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 28 பேர் பரிதாபமாக பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வரகிறது. அதிபர் பாஷர் அல் – ஆசாத் அரசின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிரியாவின் 2-வது பெரிய நகரமான அலெப்போ மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அதை மீட்க சில மாதங்களாக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அலெப்போ அருகேயுள்ள சர்மதா என்ற இடத்தில் அகதிகள் முகாம் உள்ளது. துருக்கி எல்லையில் உள்ள இந்த முகாமில் ஏராளமான மக்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இப்பகுதியில் நேற்று சிரியா ராணுவத்தின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின.
அதில் அங்கு இருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் அங்கு தங்கியிருந்த 28 அகதிகள் குண்டு வீச்சில் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
இத்தகவலை கண்காணிப்பு குழுதெரிவித்துள்ளது. தற்போது சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிரியா ராணுவம் அலெப்போ மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
Average Rating