வேலூர் அருகே 2 லாரிகள் மோதி தீப்பிடித்தது: டிரைவர் பலி…!!
வேலூர் அருகே இன்று 2 லாரிகள் மோதி தீப்பிடித்தன. இதில் லாரி டிரைவர் பலியானார்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு பேப்பர் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார்.
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அந்த லாரி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பிள்ளையார்குப்பம் அருகே மேம்பாலத்தில் அந்த லாரி ஏறியது.
அந்த நேரத்தில் பின்னால் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி பார்சல் சர்வீஸ் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கண்டெய்னர் லாரியின் பின் பக்கத்தில் பார்சல் லாரி பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் பார்சல் லாரியின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த தீ லாரி முழுவதும் பரவி எரிந்தது. கண்டெய்னர் லாரியின் பின் பகுதியும் தீப்பிடித்து எரிந்தது.
பார்சல் லாரி டிரைவரின் கால் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அவரால் வெளியே வர முடியவில்லை. இதனால் லாரிக்குள் சிக்கிய அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
பார்சல் லாரியில் இருந்த செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், டி.வி.க்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட லட்சக்கணக்கான மதிப்பில் பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.
லாரிகள் தீப்பிடித்து எரிந்த தகவல் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கும், ரத்தினகிரி போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பார்சல் லாரி டிரைவர் லாரிக்குள் கரிக்கட்டையாகி பிணமாக கிடந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது பிணம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ரத்தினகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள. இந்த சம்பவம் வேலூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating