வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் 82 வயதான மூதாட்டி ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளையர்கள் இருவர் திருடியுள்ள சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Welschmattstrasse என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூதாட்டி ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
மூதாட்டிக்கு 82 வயது நிரம்பியுள்ளதால் அவருக்கு சரியாக பார்வை தெரியாது. இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் கணவர் வெளியில் சென்றுவிட, மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டில் அழைப்பு மணி அடித்துள்ளதை கேட்டு கதவுக்கு அருகே சென்றுள்ளார்.வீட்டுக்கு வெளியே இரண்டு நபர்கள் நின்றுள்ளனர்.
‘நாங்கள் மிகவும் குறைவான விலையில் உடுப்புகளை விற்கிறோம். 10 பிராங்க் கொடுத்தால் போதும் ஒரு மேல் உடுப்பை தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய மூதாட்டியும் கதவை திறந்துள்ளார். கதவு திறந்த அடுத்த கணம் இருவரும் வீட்டிற்குள் நுழைந்து அங்கும் இங்கும் தேடியுள்ளனர்.
நபர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, அவர்கள் இருவரும் கொள்ளையடிக்க வந்துள்ளனர் என்பதை அறிந்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.
சில நிமிடங்கள் இடைவெளியில் வீட்டிற்குல் இருந்த ஒரு கைப்பை மற்றும் மூதாட்டியின் பணப்பையை திருடிக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
இச்சமயத்தில் வெளியே சென்றுருந்த மூதாட்டியின் கணவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது, ‘எங்களுக்கு மிகவும் பசிக்கிறது. உணவுக்காக தான் உங்கள் மனைவியிடம் திருடிச் செல்கிறோம்’ என உரக்க கூறிவிட்டு அங்கிருந்து தப்பிவிடுகின்றனர்.
இச்சம்பவத்தில் மூதாட்டிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பட்டப்பகலில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முதியவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் ‘’வீடுகளில் தனியாக இருக்கும் பொதுமக்கள், குறிப்பாக வயதான நபர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சந்தேகப்படும்படியான நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்றால், அவர்களுக்கு எந்த சூழலும் கதவை திறந்து விடக்கூடாது.
மேலும், மலிவான விலையில் பொருட்களை விற்பனை செய்ய வந்தாலும், அதனை உடனடியாக நம்பிவிடக்கூடாது.
இதுப்போன்ற சூழல்களில் பொதுமக்கள் பொலிசாரிடன் உதவியை நாட வேண்டும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating