நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுப் பதிவு விறுவிறு!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் இன்றுகாலை வாக்குப் பதிவு தொடங்கியது. நடிகர், நடிகையர் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு வருகின்றனர். நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தம் 1928 நேரடி ஓட்டுக்களும், 595 தபால் ஓட்டுக்களும் உள்ளன.
ஆண்களுக்கு தனி வாக்குச் சாவடியும், பெண்களுக்குத் தனி வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தன. வெயில் தாக்காமல் இருக்க பெரிய ஷாமியானா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் சரத்குமார் எட்டரை மணிக்கு ஓட்டுப் போட்டார்.
தொடர்ந்து நடிகர்கள் விஜயக்குமார், நெப்போலியன், ரவிச்சந்திரன், செந்தில், சார்லி, “ஸ்ரீகாந்த், பரத், அலெகஸ், ராதாரவி, குண்டு கல்யாணம், குமரிமுத்து உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மனோரமா, செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ஸ்ரீபிரியா, விந்தியா உளளிட்ட நடிகைகளும் வாக்களித்தனர்.
மாலை 6 மணி வரைக்கும் வாக்குப் பதிவு நடைபெறும். 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.