வாணியம்பாடி அருகே தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை…!!
தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி மற்றும் பால் வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் தர்மன் (வயது35). விவசாயி. இவருடைய மனைவி ஜெகதா (30). இவர்களுக்கு அன்பரசன், சதீஸ், கோகுல் என்று 3 மகன்கள் உள்ளனர். பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஜெகதா தனது மகன்கள் சதீஸ் மற்றும் கோகுலை அழைத்துக் கொண்டு ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் புதூர் கிராமத்தில் வசிக்கும் தாய் வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் தர்மன் மற்றும் அவருடைய மூத்த மகன் அன்பரசன் மட்டும் இருந்தனர். நேற்றிரவு 2 பேரும் வழக்கம்போல் சாப்பிட்ட பிறகு வீட்டுக்குள் தூங்கினர். அப்போது புழுக்கம் காரணமாக காற்றோட்டமாக தூங்குவதற்கு தர்மன் மட்டும் வீட்டு வாசலில் வந்து படுத்து தூங்கினார். இன்று விடியற்காலையில், தூங்கி எழுந்த மகன் அன்பரசன், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.
அப்போது தந்தை அன்பரசன் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது அருகில் பெரிய பாறாங்கல் கிடந்தது. அவரது தலையில் கல்லை போட்டு யாரோ? கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்களை கத்தி கூச்சலிட்டு அன்பரசன் உதவிக்கு அழைத்தார்.
உறவினர்கள் அங்கு திரண்டனர். உயிருக்கு போராடிய தர்மனை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மன் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி அருண்குமாரையும் (வயது27) பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் தர்மன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating