மாத்தறையில் போலி வைத்தியர் கைது..!!
மாத்தறை வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடமாக போலியாகக் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலடுவ – கல்பமுன பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேகநபர் பல தனியார் மருந்தகங்களையும் நடாத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர் தன்னுடைய போலி வைத்திய அடையாள அட்டை மற்றும் கொடுப்பனவு பற்றுச் சீட்டை காண்பித்து மாத்தறை நகரின் லீசிங் நிறுவனம் ஒன்றில் கடன் தொகையினை பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியர் என்று தன்னை இனங்காட்டிக் கொண்ட இந்த நபர், வைத்தியசாலையில் தங்கியிருக்கும் வைத்தியர்களுக்கு சிகிச்சையளித்துள்ளதுடன், பெண்களின் ஸ்கேன் பரிசோதனைகளையும் முன்னின்று நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெறும் பல முக்கிய சுகாதார கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டுள்ள இந்த நபர் பல நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி தேசிய கொடியையும் ஏற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சுகமடைந்த ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதுடன், இதன் மூலம் பல லட்சம் நன்கொடைகள் பெற்றுக் கொண்டமையும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போலி வைத்தியர் இராணுவத்தில் பணி புரிந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு செவிலி அதிகாரி எனவும், இவர் மாத்தறை நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளதுடன் உயர்தரத்தில் சித்தியடைய தவறிய நபர் என்றும் குறி்ப்பிடப்பட்டுள்ளது.
Average Rating