விஷ ஊசி போட்டு கொலை: 2 பேர் பிணம் தோண்டி எடுப்பு – எலும்புகள் தடயவியல் ஆய்வு…!!
விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு எலும்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீலங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர் தனது மனைவியை தன்னுடன் வாழ விடாமல் செய்த ஆயிரம் விளக்கை சேர்ந்த மைத்துனர் ஜான் பிலோமினன் என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்தார்.
மேலும் தனது கள்ளக்காதலிகளின் கணவர்களான உத்திரமேரூரை சேர்ந்த ஸ்ரீதர், மடிப்பாக்கத்தை சேர்ந்த ஹென்றி ஆகியோரையும் விஷ ஊசி போட்டு கொலை செய்தார். இந்த கொலைக்கு ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார், கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம் உடந்தையாக இருந்தனர்.
குடையின் நுனியில் விஷ ஊசியை இணைத்து யாரும் சந்தேகப்படாத வகையில் சாலையில் நடந்து சென்ற போது இந்த கொலைகளை செய்தனர்.
3 பேரையும் கொலை செய்வதற்கு முன்பு விஷ ஊசி சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய ஒரு மனநோயாளியையும், தெருவில் சுற்றித்திரிந்த நாய்களையும் கொன்றுள்ளனர்.
இறந்த 3 பேருக்கும் நெஞ்சுவலிக்கான அறிகுறியே தென்பட்டதால் இந்த வழக்கை முதலில் சாதாரண வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர். இப்போது அதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளுக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் 3 பேரின் பிணத்தையும் மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டின் அனுமதியையும் பெற்றனர்.
இந்த நிலையில் சென்னையில் புதைக்கப்பட்டிருந்த ஜான் பிலோசினன் பிணத்தையும், காஞ்சீபுரம் மண்டலம் பெருநகரில் புதைக்கப்பட்டிருந்த ஸ்ரீதர் பிணத்தையும் போலீசார் தோண்டி எடுத்தனர். பின்னர் பிணத்தில் இருந்த முக்கியமான எலும்புகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஹென்றியின் பிணத்தையும் தோண்டி எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தடயவியல் துறை ஆய்வில் விஷ ஊசி செலுத்தப்பட்டு இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அது வழக்கின் திருப்புமுனையாக அமையும்.
Average Rating