அதிவேகமாக சென்ற காருக்குள் இருந்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார்…!!
அமெரிக்காவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அக் காருக்குள் குழந்தை பிரசவிக்கும் நிலையிலுள்ள கர்ப்பிணி இருப்பதைக் கண்டு, அப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீதியொன்றில் அன்னையர் தினமான கடந்த ஞாயிறன்று வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அக் காருக்குள் ஷஷா மர்பி எனும் பெண் பிரசவ வலியுடன் இருந்தார். அவரின் கணவரான மொஹம்மத் டின்ட்லே பதற்றத்துடன் சாரதி ஆசனத்தில் காணப்பட்டார்.
நிலைமையை உணர்ந்த பொலிஸ் அதிகாரிகளான பிறையன் ஆர்மென்டரிஸும் மரியா தூமலாட்டியும் மேற்படி தம்பதிக்கு உதவ முன்வந்தனர். அப் பெண்ணையும் அவரின் கணவரையும் வைத்தியசாலைக்கு அப்பொலிஸ் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் வைத்தியசாலையை அடைந்தவுடன் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு தகவல் கொடுத்தார். எனினும், மருத்துவர்கள் அக்காரை நெருங்குவதற்கு முன்னரே மற்றைய பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் மரியா ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார்.
இக் குழந்தைக்கு மெசியா என பெயரிடப்பட்டுள்ளது. “அன்னையர் தினத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகளின் வழித்துணையுடன் அழைத்துச் செல்லப்பட்ட காருக்குள் மெசியா டின்ட்லே பிறந்துள்ளார்” என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அக் குழந்தை, அதன் பெற்றோர் மற்றும் மேற்படி பொலிஸ் அதிகாரிகள் காணப்படும் புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டு ள்ளனர்.
Average Rating