“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – (பாகம் -1)

Read Time:28 Minute, 42 Second

timthumbசிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது.

சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது.

20க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் அங்கத்தவர்கள், காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வு துறை (Terrorism Investigation Department (TID) யினரின் தலைமையில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட அதிரடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

அநேகமாக எல்லா முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களையும் கடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் (பி.ரி.ஏ -provisions of the draconian Prevention of Terrorism Act (PTA). பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, பூசா, மற்றும் கொழும்பிலுள்ள ரி.ஐ.டி அதிகாரிகள் அவர்களை விசாரணை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகளில் பலரும் மே 2009ல் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் சரணடைந்தவர்கள் ஆவர்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்ததின் பின்னர் ஒரு புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதின் பின்னர் விடுவிக்கப் பட்டிருந்தார்கள்.

தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் சிலர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படவில்லை என அறிய முடிகிறது.

வெளிப்படையாக அவர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் சரணடையாததுடன் கடந்த காலத்தில் பிடிபடாமல் தப்பித்து வந்தார்கள். அதேவேளை கிட்டத்தட்ட 12,000 பேர் வரையிலான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சரணடைந்த பின்னர் புனாவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

4,000 வரையிலான முன்னாள் புலிகள் சரணடையாமல் தொடர்ந்தும் ஸ்ரீலங்காவில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தொகையான முன்னாள் புலி உறுப்பினர்கள் மே 2009க்குப் பிறகு ஸ்ரீலங்காவை விட்டு தப்பியோடியும் உள்ளார்கள். இதில் புனர்வாழ்வு பெற்ற மற்றும் புனர்வாழ்வு பெறாத இருவகையான புலி உறப்பினர்களும் அடங்கியுள்ளார்கள்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் நான்கு மூத்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் அடங்குகிறார்கள்.

அந்த நான்கு பேரும், முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனின் 2004 கிழக்கு மாகாண கிளர்ச்சியைத் தொடர்ந்து அவர் பிரிந்து சென்றதின் பின்னர், கிழக்கு மாகாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டளைக் கட்டமைப்பின் கீழ் அதிகாரமிக்க பதவிகளை வகித்தவர்கள் ஆவர்.

அவர்கள், கேணல் ராம் என்கிற எதிர்மன்னசிங்கம் ஹரிச்சந்திரன், லெப்.கேணல் நகுலன் என்கிற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி, லெப். கேணல். கலையரசன் என்கிற கணேசபிள்ளை அறிவழகன், மற்றும் லெப.கேணல் பிரபா என்கிற கிருஸ்ணபிள்ளை கலைநேசன் என்பவர்களாவர்.

அவர்கள் நால்வரில் மூவர் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதேவேளை நான்காமவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டார்கள்.

நான்கு மூத்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ கிழக்கு மாகாண தலைவர்கள்.

கைது செய்யப்படவேண்டிய நான்கு கிழக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களில் முதலாவதாக ஏப்ரல் 24, 2016ல் கைது செய்யப்பட்டவர் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ராம் என்கிற ஹரிச்சந்திரன்.

கேணல் ராம் முன்னர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் புலிகளின் எல்.ரீ.ரீ.ஈ தளபதியாக இருந்தவர்.

ராம் 1984ல் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தவர், வன்னி என அழைக்கப்படும் வடபகுதி பிரதான நிலப்பரப்பில் நடந்த போரில் தனது மனைவியையும் மற்றும் இரண்டு பிள்ளைகளையும் இழந்தவர்.

போருக்குப் பின்னர் அவர் திரும்பவும் மணமுடித்து உள்ளதுடன் தம்பிலுவில் பிரதேசத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டும் வந்தார். ஹரிச்சந்திரன் அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவிலைச் சேர்ந்தவர்.

அவர் வயலில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வேளையில், அவர் பிடிக்கப்பட்டு ஒரு நீல நிற ஜீப் வண்டியில் குண்டுக் கட்டாக தூக்கிப் போடப்பட்டு அடையாளம் தெரியாத சில நபர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரது மனைவி அது பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டவுடன், ராம் விசாரணைகளுக்காக ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவதாக ஏப்ரல் 25, 2016ல் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யின் மூத்த தலைவர் லெப்.கேணல் கலையரசன் என்கிற கணேசபிள்ளை அறிவழகன். இதற்கு முன்பு கமல் என்கிற இயக்கப் பெயரால் அழைக்கப்பட்ட கலையரசன், போர் முடிவுறும் போது திருகோணமலை மாவட்டத்தின் எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுத் தலைவராக இருந்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் உள்ள ஆலங்கேணிதான் கலையரசனின் சொந்த ஊராகும், அவர் இப்போது திருமணம் செய்து திருகோணமலை நகர்ப் பகுதியில் வசித்து வருகிறார். போர் முடிவுற்றதின் பின்னர் அவர் பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

முதலில் ரி.ஐ.டி (TID) அதிகாரிகள் குழுவினர் சிலர் சிவில் உடையில் இரவு நேரத்தில் கலையரசனை தேடி சனல் வீதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்கள்.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு பிரிவுத் தலைவர் குழப்பமடைந்து மிகவும் மோசமான அச்சம் அடைந்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார். விடியும்வரை வேறு இடத்தில் மறைந்திருந்ததின் பின்னர், கலையரசன் காலையில் மனித உரிமைகள் ஆணையகத்தின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் பாதுகாப்புத் தேட முயற்சித்துள்ளார்.

அவர் தனது மனைவி சித்தாராவின் துணையுடன் அங்கு சென்றுள்ளார். தங்களை ரி.ஐ.டி அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்களால் திருகோணமலை மனித உரிமைகள் அலுவலக வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிதாராவிடம், இந்தக் கைதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை மற்றும் அவரது கணவர் இன்னும் ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார் என உறுதி வழங்கப்பட்டது.

ஏப்ரல் 25 ல் கைது செய்யப்பட்ட கமல் என்கிற இயக்கப் பெயரை கொண்டிருந்த கலையரசன் என்கிற அறிவழகன் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

மூன்றாவதாக 26 ஏப்ரல் 2016ல் கைது செய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் லெப்.கேணல நகுலன் என்கிற கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி.

1989ல் இயக்கத்தில் இணைந்த நகுலன், எல்.ரீ.ரீ.ஈ யின் சாள்ஸ் அந்தோனி காலாட் படைப் பிரிவின் விசேட தளபதியாகக் கடமையாற்றினார்.

பின்னர் அவர் கேணல் ராமின் கீழ் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்.ரீ.ரீ.ஈ யின் துணை இராணுவ தளபதியாக கடமையாற்றினார்.

நகுலன் கிழக்கு மாகாணத்தில் பல வருடங்களாக நிலை கொண்டிருந்த போதிலும் உண்மையில் அவர் வடக்கைச் சேர்ந்தவர். நகுலன் என்கிற சிவமூர்த்தி யாழ் குடாநாட்டிலுள்ள நீர்வேலியைச் சேர்ந்தவர்.

போருக்குப் பின்னர் சிவமூர்த்தி திருமணம் செய்து வாழைப் பயிர்ச் செய்கை மற்றும் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நீர்வேலி அதன் வழைப்பழங்களுக்கும் மற்றும் கிழங்குகளுக்கும் பேர் போன இடமாகும்.

அவரது மனைவி ஒரு ஆசிரியையாக பரந்தனில் பணியாற்றி வருகிறார், சமீபத்தில்தான் அவர் தனது ஆசிரியப் பயிற்சி பாடத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் பூர்த்தி செய்திருந்தார்.

ரி.ஐ.டி அதிகாரிகள் குழுவொன்று நீர்வேலியில் உள்ள நகுலனின் வீட்டுக்குச் சென்று ஒரு விசாரணைக்காக அவரைத் தம்முடன் வரும்படி அழைத்துள்ளார்கள்.

அந்த அதிகாரிகள் நகுலனின் தந்தையையும் தம்முடன் வரும்படியும், அவர்கள் ஒரு சில கேள்விகளுக்குப் பதிலளித்தபின் இருவரையும் விட்டுவிடுவதாகச் சொல்லி அழைத்துள்ளார்கள்.

யாழ்ப்பாண நகரத்தை அடைந்ததும், அதிகாரிகள் நகுலனின் தந்தையிடம் அவரது மகன் சில மணித்தியாலங்களில் விடுவிக்கப்படுவார் எனக்கூறி அவரை மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார்கள். சிவமூர்த்தி என்கிற நகுலன் இன்னமும் காவலில்தான் வைக்கப்பட்டுள்ளார்.

நான்காவதாக கைது செய்யப்பட வேண்டிய முன்னாள் எல்.ரீ.ரீ.ஈயின் கிழக்குப்பகுதி மூத்த தலைவர் லெப்.கேணல் பிரபா என்கிற கிருஸ்ணபிள்ளை கலைநேசன் மே 2, 2016ல் கைது செய்யப்பட்டார்.

பிரபா என்கிற கலைநேசன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வு பிரிவு தலைவராக போர் முடிவுற்ற மே 2009 காலப்பகுதியில் கடமையாற்றி உள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட பிரபா, மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தார்.

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். சிறிது காலம் பனையோலை பொருட்கள் இழைக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்த கலைநேசன் – கயல்விழி தம்பதிகள், மட்டக்களப்பு மச்சன்தொடுவாயில் அமைக்கப் பட்டிருந்த ஒரு தொழில்நுட்பக் கல்லூரியின் உணவு விடுதி ஒன்றை நடத்தும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்கள்.

மே 2 ந்திகதி திங்கட்கிழமை அதிகாலை நாவற்குடாவில் உள்ள பிரபா என்கிற கலைநேசனின வீட்டுக்கு ரி.ஐ.டி அதிகாரிகள் குழுவொன்று சென்றது.

முதலில் அவர் காத்தான்குடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த அதிகாரிகள் கலைநேசனின் மனைவி கயல்விழியிடம் தாங்கள் அவரை கல்முனையிலுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதேச அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள்.

ஒரு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதின் பின்னர் கணவர் விடுவிக்கப் படுவார் என்று மனைவியிடம் கூறப்பட்டது. அதன்பின் அந்த அதிகாரிகள் பிரபாவையும் கொண்டு கல்முனை வீதி வழியாக தெற்குப் பக்கமாகச் சென்றார்கள். பின்னர் கலைநேசன் என்கிற பிரபா கொழும்பிலுள்ள ரி.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது.

மறவன்புலவில் சிறிய ஆயுதச்சாலை கண்டுபிடிப்பு

தற்போதைய இந்த கைதுக் களியாட்டம் வெடித்திருப்பது, 2016 மார்ச் 29ல் யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சி பகுதியில் உள்ள மறவன்புலவில் பிள்ளையார் தெருவில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு மினி ஆயுதச்சாலை கண்டுபிடிக்கப் பட்டதின் பின்னணியில் இருந்து என்பது அனைவரும் நன்கறிந்ததே.

அங்கு கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மத்தியில் ஒரு தற்கொலை அங்கி, நான்கு கைக்குண்டுகள், ரி.என்.ரி வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், இரண்டு பற்றரி பொதிகள் அதேபோல சில 9 மி.மீ ஆயுதங்கள் என்பன இருந்தன.

இந்த ஆயுதப் பொதிகள் மன்னார் மாவட்டம் இலுப்பைக் கடவையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அந்த வீட்டின் பிரதான குடியிருப்பாளரான ரமேஷ் என அழைக்கப்படும் எட்வேட் ஜூலியனினால் கொண்டு வரப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டம் முருங்கனை சொந்த இடமாகக் கொண்ட 32 வயதான எட்வேட் ஜூலியன் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர், யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் அவர் சரணடையவோ அல்லது புனர்வாழ்வு பெறவோ இல்லை.

அவர் ஒரு ட்ரக் வண்டியை ஓட்டி மீன்களை அனுப்புவது மற்றும் விற்பதை ஒரு வியாபாரமாக செய்வதில் ஈடுபட்டு வந்தார். ரமேஷ் என்கிற எட்வேட் ஜூலியன் 30 மார்ச் 2016ல் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் மற்றும் ஜெயபுரம் இடையே உள்ள வீதித்தடை சோதனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் ரி.ஐ.டி எட்வேட் ஜூலியனைக் கையேற்று கொழும்புக்கு கொண்டு வந்தார்கள். இந்த முன்னேற்றங்களுக்கு பிறகுதான் தற்போதைய பிரவாகம் போன்ற கைதுகள் ஆரம்பமாகின.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எட்வேட் ஜூலியனுக்கு பரிச்சியமானவர்களைப் பற்றிய விபரங்கள் அவரது அலைபேசி வழியாக கண்டறியப்பட்டு அவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள்.

ஆரம்பத்தில் ஜூலியனின் தொலைபேசி வழியாக கண்டறியப்பட்ட ஐந்துபேர்கள் வுவனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கைது செய்யப்பட்டார்கள்.

இதைத் தொடர்ந்து வட மாகாணம் முழுவதும் அதிக கைதுகள் இடம்பெற்றன. கிட்டத்தட்ட கைது செய்யப்பட்ட அனைவருமே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவாகளாக இருந்தார்கள்.

இவர்களில் சிலர் முன்னர் ஒருபோதும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஏனையவர்கள் சரணடைந்தவர்கள் அவர்கள் புனர்வாழ்வு பெற்றதின் பின்னர் இப்பொழுது சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சுவராஸ்யமான முறையில் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏறக்குறைய காவல்துறை புலனாய்வு திணைக்களத்தின் ஒரு தனியான நடவடிக்கை போலேவே தெரிகிறது.

வேறு அரசாங்க முகவர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாகவோ அல்லது கலந்தாலோசிக்கப் பட்டதாகவோ தெரியவில்லை. பத்திரிகைச்செய்திகள் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் இயக்கப்படுவதும் மற்றும் மேற்பார்வை இடப்படுவதும் ரி.ஐ.டி இயக்குனராக உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) நாலக டீ சில்வா அவர்களாலேயே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளன.

தேவையற்ற விளம்பரங்களோ அல்லது ஆரவாரங்களோ இல்லாமல்,மறவன்புலவு ஆயுதப் பொருட்களின் கண்டுபிடிப்பு தொடர்பான விடயங்களை ஆய்ந்தறிவதற்கு ரி.ஐ.டி தீர்மானித்திருப்பது போலத் தெரிகிறது.

கடந்த சில வருடங்களாக வடக்கு மற்றும் கிழக்கின் பல பாகங்களிலும் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்படும் நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன.

வெளிப்படையாக எல்.ரீ.ரீ.ஈ கூட்டாகவும் மற்றும் புலிகள் தனித்தனியாகவும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், மற்றும் தளபாடங்களை பல்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொட்டியோ அல்லது மறைத்தோ வைத்திருந்தன.

சமீபத்தைய வருடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவை கண்டறியப்பட்டும் வந்துள்ளன.

தற்போது கேள்விக்குள்ளாகி இருக்கும் ஆயுத சேகரிப்பு முன்பு 2008ல் இலுப்பைக்கடவையில் களஞ்சியப்படுத்தப் பட்டவை போலத் தெரிகிறது.

அந்த காலகட்டத்தில் சவேந்திர சில்வா தலைமையில் இயங்கிய 58ம் படைப் பிரிவின் முன்னேற்றத்தினால் படிப்படியாக பின்வாங்கிய புலிகள் அப்போது இதைச் செய்திருக்கலாம் எனச் சநதேகிக்கப்படுகிறது.

எனினும் இந்தக் கண்டுபிடிப்பின் பின்னர் குழப்பமேற்படும்படி கிளம்பும் கேள்வி என்னவென்றால், இத்தனை வருடங்களுக்குப் பின்னர் இந்த ஆயுத சேகரிப்பு ஏன் மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கொண்டு பரப்பட்டது மற்றும் இந்தக் கட்டத்தில் ஏன் மறவன்புலவில் வைக்கப்பட்டது?

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஒரு தாக்குதலோ அல்லது படுகொலையோ திட்டமிடப் பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக மே 2009ல் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டுக் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை.

வெளிநாட்டிலுள்ள சில எல்.ரீ.ரீ.ஈ சக்திகள் இந்த இலங்கை தீவில் ஒரு புலிகளின் புத்துயிர்ப்பை ஏற்படுத்தி வன்முறைகளை உருவாக்க முயற்சித்து வருகின்றன.

கடந்த காலங்களில் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் அளிப்பதற்கு அப்பட்டமாக மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த மூன்று முயற்சிகளும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. நான்காவதாக ஒரு முயற்சி இப்போது செயல்படுத்தப்பட இருந்ததா?

வெளிநாட்டுப் புலிகள் எந்தவித இடர் முயற்சியிலும் ஈடுபடப் போவதில்லை. அவர்கள் செய்வது என்னவென்றால் இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஏனையவர்களை இத்தகைய புத்துயிர்ப்பு முயற்சியில் தூண்டிவிட்டு ஊக்குவிப்பது மட்டுமே.

புலம்பெயர் புலிகளால் எளிதாக அவர்களுக்கு நிதியுதவி வழங்க முடியும். ஸ்ரீலங்காவிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு கடுமையான பணத்தேவை உள்ளது.

அதனால் வெளிநாட்டுப் புலிகள் ஊக்கத்தொகையாக பணத்தைப் பயன்படுத்தி வன்முறையை மீள ஆரம்பிக்கும் முன்னெடுப்புகளைத் தூண்டிவிடலாம்.

எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்க மேற்கொள்ளும் ஒரு முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ அதன் மரபு வழி இராணுவ பிரிவுகள், பாரிய பீரங்கிகள்,கடற்படை உபகரணங்கள் அல்லது துளிர்விட்டுக் கொண்டிருந்த விமானப்படைப் பிரிவு என்பனவற்றுடன் மீளவும் வருகின்றது என்கிற அர்த்தம் அல்ல.

தற்போதைய பின்னணியில் மறுமலாச்சி முயற்சி என்பது அழிவுப்பாதையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கான ஒன்று அல்லது இரண்டு நடவடிக்கைகள் என்றே அர்த்தமாகும்.

ஒரு படுகொலை அல்லது ஒரு பெரிய வெடிப்பு அதற்கு போதுமானது. புலிகள் திரும்ப வந்தவிட்டார்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று பெரிய அளவில் தம்பட்டமடிப்பதற்கு இதுவே போதும், மற்றும் மேற்கில் இதைப் பயன்படுத்தி நிதி சேகரிப்பை மேற்கொள்ளலாம்.

இலங்கை தீவில் புலிகளின் புத்துயிர்ப்பு முயற்சிகள்

இந்த குறிக்கோளின் அடிப்படையில் வெளிநாட்டிலுள்ள புலிகளின் உறுப்பினர்கள் தீவில் ஒரு புலி புத்துயிர்ப்பு முயற்சியை தூண்டிவிடுகின்றன.

இந்த காரணத்துக்காக பின்தொடர்பவர்களாக முன்னாள் புலி அங்கத்தவர்களின் இதயங்களையம் மனங்களையும் கவருவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ள அடிப்படை என்னவென்றால், தற்போது அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் தங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் வெளிநாட்டு புலிகள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதற்கு சாத்தியமானவர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு இலக்கு வைக்கிறார்கள்.

அதேபோல ஸ்ரீலங்காவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள்கூட முன்னாள் புலிகளை இந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சாத்தியம் கொண்டவர்களாக சந்தேகிக்கிறார்கள்.

எப்பொழுதாவது ஒரு பிரதேசத்தில் குற்றம் நிகழ்ந்தால் காவல்துறையினர் அந்தப் பிரதேசத்தில் உள்ள தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை சுற்றிவளைப்பது போல, சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அதிகாரிகள் கூட, எப்போதாவது எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சி தோன்றுவதாக சந்தேகம் எழுந்தால் முன்னாள் புலி அங்கத்தவாகளைத்தான் இலக்கு வைக்கிறார்கள்.

இப்படித்தான் மறவன்புலவு ஆயுதக் கண்டுபிடிப்பின் விளைவாக தொடர்ச்சியான முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கைதுகளும் இடம்பெற்றன.

அசல் சந்தேகநபரான எட்வேட் ஜூலியன் என்கிற ரமேஷ் ஒரு புனர்வாழ்வு பெற்றிராத முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவராக இருந்தபடியால் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னாள் புலிகளின் கைது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் குறிப்பிட்டளவு நம்பகத்தன்மையை கொண்டதாகவும் அமைந்துவிட்டது.

பிரதானமாக முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ நண்பர்கள் மற்றும் எட்வேட் ஜூலியனின் தொடர்புகளில் கவனம் செலுத்தியபோது வடக்கில் ரி.ஐ.டி யினர் சுமார் 20 பேரைக் கைது செய்தனர்.

விரைவிலேயே இந்த கைது விளையாட்டு கிழக்கு மாகாணத்திலும் கூடப்பரவியது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட கைதுகள் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இது எதனாலென்றால் கிழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே மூத்த புலிகள், ஒருகாலத்தில் அவர்கள் உயர் சுயவிபரங்களைக் கொண்ட கிழக்கு மாகாண எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களாக இருந்தவர்கள்.

நீர்வேலியை சேர்ந்தவரான நகுலன் வடக்கில் கைது செய்யப்பட்டதன் நடைமுறை நோக்கம் அவர் ஒரு கிழக்கைச் சேர்ந்தவராக பல வருடங்கள் கிழக்கில் குடியிருந்தவர் என்பதற்காக அவர்கள் ஏன் இப்போது கைது செய்யப்படுகிறார்கள்? என்பதுதான் திகைப்பூட்டும் கேள்வி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் உணவு விடுதி மீது துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி..!!
Next post பண்ருட்டி அருகே லாரி மோதி பிளஸ்-2 மாணவர் பலி: அதிர்ச்சியில் தாய் மரணம்..!!