ஆட்டோ ரிக்ஷா மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 15 பேர் பலி..!!
பேருடன் வந்த ஆட்டோ ரிக்ஷா மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டத்தை சேர்ந்த சிலர் தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். செங்கல் சூளை அமைந்துள்ள இடத்திலேயே சிறிய குடிசைகளில் இவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர்.
அருகாமையில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக நேற்று இவர்களில் சிலர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்தனர். அதில் 18 பேர் பயணம் செய்தனர். அடிலாபாத் மாவட்டம், பைன்சா நகர் வழியாக சென்றபோது, நள்ளிரவில் எதிரே சரளைக்கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரி அந்த ஆட்டோ ரிக்ஷாவின்மீது பயங்கரமாக மோதி, ஆட்டோவின்மீது சாய்ந்தது.
இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் டிப்பர் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசாரும், மீட்புப் படையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நான்கு பேரை உயிருடனும், 14 பேரை பிரேதமாகவும் மீட்டனர்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியில் இன்னொருவர் உயிரிழந்த நிலையில் மூன்றுபேர் மட்டும் நிஜாமாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் ஐந்து பெண்கள், நான்கு சிறுவர், மூன்று சிறுமியர் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக தெரிவித்த பைன்சா நகர போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating