`போர் நிறுத்தம் செய்ய முடியாது’ ஐ.நா.சபையின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்தது
போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதல் நேற்று 18-வது நாளாக நீடித்தது. இஸ்ரேல் குண்டு வீச்சில் லெபனானில் இதுவரை 450-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பிலும் உயிர்ச் சேதம் ஏற்பட்டு உள்ளது.
லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஏற்கனவே ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு நிவாரண பொருட்கள் போய்ச் சேருவதற்கு வசதியாக 3 நாட்கள் போர் நிறுத்தம் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நிவாரண உதவி ஒருங்கிணைப்பாளர் ஜான் இகிலாண்டு இஸ்ரேலையும், ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
ஹிஸ்புல்லா இயக்கத்தினர் போர் முனையில் அப்பாவி மக்களை மனித கேடயமாக பயன்படுத்த இருப்பதாகவும், எனவே அவர்களுடன் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும் போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை விடுத்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜிடியான் மெயர் கூறினார்.
அமெரிக்க மந்திரி
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டோலிசா ரைஸ் இரண்டாவது தடவையாக ஜெருசலேம் நகருக்கு சென்று உள்ளார். அவர் கூறுகையில், மோதலை நிறுத்துவது தொடர்பாக `கெடு’ எதுவும் விதிக்கவில்லை என்றும், ஆனால் இருதரப்பினரும் தாக்குதலை விரைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ள லெபனான் மந்திரி சபை மேற்கொண்டு இருக்கும் நடவடிக்கை ஆக்கபூர்வமானது என்றும் அவர் கூறினார்.
தாக்குதல் தீவிரம்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தின.