அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்..!!
அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுக்களுடன் ரூ.22 லட்சம் நிதி உதவி குவிந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் டன்யா டிலூசா. இவரது மகள் மோல்லி டிலூசா (7). இவர்களது வீட்டில் 2 வயதான ஹயுஸ் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை செல்லமாக வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று சிறுமி மோல்லி தனது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு கொடிய விஷமுள்ள கிலுகிலுப்பை பாம்பு (ரேட்டில் சினேக்) வந்தது. அது விளையாடிக் கொண்டிருந்த மோல்லியை கடிக்க தயாராகி கொண்டிருந்தது.
அதை பார்த்த ஹயுஸ் நாய் பாய்ந்து வந்து சிறுமிக்கும், பாம்புக்கும் இடையே நின்றது. அதன் பின்னர் திரும்பி பார்த்த சிறுமி மோல்லி பாம்பு இருப்பதை பார்த்து ஓடிவிட்டாள்.
அதன் பின்னரும் நாய் விடவில்லை. பாம்புடன் சண்டையிட்டு அதை கடித்து குதறியது. உடனே அப்பாம்பு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. ஆனால் பாம்பு கடித்ததில் நாயின் உடலில் காயம் ஏற்பட்டது.
உடலில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியால் அவதிப்பட்டது. உடனே அதற்கு கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து இணைய தளம் மூலம் தகவல் அறிந்த பொதுமக்கள் சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுக்களுடன் ரூ.22 லட்சம் நிதி உதவி குவிந்தது. அதன் மூலம் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating