சொத்து தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற தனியார் பஸ் டிரைவர்…!!
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மரியசூசை. இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு டேனியல் சுதன் (வயது 28),தீபன் அருள்ராஜ் (23) என்ற 2 மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யா திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார்.
டேனியல் சுதன் திருச்சியில் இருந்து அரியாவூருக்கு இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபன் அருள்ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புஊருக்கு வந்து விட்டார். இவர்களின் தந்தை மரியசூசை கடந்த 1 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் குடும்பத்துக்கு சொந்தமான 2 ஏக்கர் நில சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் வந்தது. தீபன் அருள்ராஜ்க்கு வேலை எதுவும் இல்லாததால் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் அண்ணன்-தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் ஒரே வீட்டில் வசித்த வந்தாலும் தகராறு காரணமாக பேசுவது கிடையாது.
இன்று அதிகாலை டேனியல் சுதன் , தண்ணீர்குடிப்பதற்காக எழுந்து வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், தீபன் அருள்ராஜ்க்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தீபன் அருள்ராஜ் அரிவாளால் டேனியல் சுதனை வெட்ட முயன்றார். சுதாரித்து கொண்ட டேனியல் சுதன், தீபன்அருள்ராஜிடமிருந்த அரிவாளை பிடுங்கினார். பின்னர் ஆத்திரத்தில் தீபன்அருள்ராஜை அரிவாளால் வெட்டினார். இதில் அவரது உடலில் 7 இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த வெட்டுக்காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தீபன் அருள்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே உணர்ச்சி வசப்பட்டு தம்பியை கொன்றடேனியல் சுதன் கதறி அழுதார். பின்னர்தாயனூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்தார். அவரை சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating