தேர்தல் முடிந்தும் பீதி அகலவில்லை: ஆத்தூர் தொகுதியில் போலீசார் குவிப்பு…!!
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் ஆத்தூர் தொகுதியில் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 19–ந்தேதி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்ட ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் நத்தம் விசுவநாதனை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தோற்கடித்தார்.
வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமி முன்னிலையில் இருந்ததால் தி.மு.கவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். தேர்தலுக்கு முன்பு ஆத்தூரில் வெல்லப் போவது யார்? என அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பலதரப்பட்ட மக்களும் பெட்டிங் கட்டினார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு தி.மு.க முன்னாள் அமைச்சர் வெற்றியை ஆத்தூர் பகுதி மக்கள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.கவினர் உற்சாகத்தில் கொண்டாடினர்.
இத்தொகுதியில் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் மொட்டையடிப்பதும், கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு.
இரு கட்சியினரை சேர்ந்த நிர்வாகிகள் சந்திக்கும் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதல் ஏற்படுவதும் உண்டு. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 நாட்களாகியும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக அதனை தடுக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். இதனால் தேர்தலுக்கு பிறகும் ஆத்தூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Average Rating