உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லே: கால்களால் தேர்வெழுதி 71 சதவீதம் மதிப்பெண் எடுத்த சாதனை மாணவர்..!!
திடகாத்திரமான உடல் இருந்தும், வசதியான குடும்பச்சூழல் அமைந்தும் கல்வி என்பது பலருக்கு எட்டிக்காயாக கசக்கும் இந்த காலகட்டத்தில் இருகைகளும் இல்லாத ஏழை மாணவன் இருகால்களின் பாதங்களில் பேனாவை பிடித்து தேர்வெழுதி, 71 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளான்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மணிப்புரி மாவட்டத்தில் வசிக்கும் ஏழை தம்பதியரின் மகனான அஜய் குமாருக்கு பிறவியிலேயே இருகைகளின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தது. இந்த குறைபாட்டை எதிர்த்து வாழத் துணிந்த அஜய், கைகளுக்கு பதிலாக இருகால்களைவைத்தே தனது சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பழகிக் கொண்டான்.
பள்ளியிலும், பென்சில், பேனாவை தனது இருகால்களின் பாதங்களில் பிடித்து எழுதப் பழகிய அஜய் குமார்(16) தற்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 71 சதவீதம் மதிப்பெண்களை பெற்று, சகமாணவர்களை திகைப்பில் ஆழ்த்தியதுடன், பெற்றோரின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளான்.
‘உள்ளம் ஊனப்பட்டா, உடம்பிருந்தும் பயனில்லே – உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லே’ என்னும் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு அர்த்தம் சேர்த்துள்ள அஜய் குமாரின் தன்னம்பிக்கையை நாமும் பாராட்டாமல் இருக்க முடியாது. எதிர்காலத்தில் என்ஜினீயர் ஆவதே எனது இலட்சிய கனவு என்று கூறும் இவரது கனவு மெய்ப்பட இறைவன் துணையிருக்க வாழ்த்துவோம்!
Average Rating