டிப்பர் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!
டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். விபத்தில் கார் டிரைவரும் பலியானார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயா பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சாய்சூர்யா (வயது 50). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி சுதாமணி (42). இவர்களது ஒரே மகன் தனுஷ் (25). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் சேலம் வந்தனர். காரை பெங்களூரை சேர்ந்த சிவானந்தா (31) என்பவர் ஓட்டினார்.
சேலத்தில் சாய்சூர்யா வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து விட்டு நேற்று காரில் கும்பகோணம் புறப்பட்டார். மாலை 4¼ மணிக்கு வழியில் கார் ஆத்தூர் அருகே முல்லைவாடி சந்திரகிரி புறவழிச்சாலை பிரிவு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த டிப்பர் லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சாய்சூர்யா, அவரது மனைவி சுதாமணி, மகன் தனுஷ் மற்றும் டிரைவர் சிவானந்தா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், காரில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தேனிமாவட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating