டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…!!
சென்னை சூளை பட்டாளம் டிமிலஸ் சாலையை சேர்ந்தவர் பாபுசிங் (வயது 50). சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.
கடந்த 3–ந்தேதி மாலை அவர், டிராவல்ஸ் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாபுசிங்கை ஆட்டோவில் வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லும் காட்சி அருகில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து யானை கவுனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலையாளிகளை சவாரி ஏற்றி வந்த ஆட்டோ டிரைவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பிடித்தனர்.
அப்போது அவர்கள் இருவரையும் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இறக்கி விட்டதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.
கண்காட்சி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ராஜஸ்தான், மும்பை, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் விசாரணையை தொடங்கினர்.
அப்போது பாபுசிங் கொலையில் புனேயை சேர்ந்த கூலிப்படை தலைவன் ராகேஷ் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. அவனை அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தனிப்படையினர் பிடித்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி ஒருவனும் சிக்கியுள்ளான்.
அவர்கள் 2 பேரையும் மும்பையில் வைத்தே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பாபு சிங்கின் கொலைக்கான காரணங்கள் குறித்த தகவல்கள், பின்னணி பற்றி தெரியவந்ததாக தெரிகிறது.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிப்பதற்காக போலீசார் தொடர்ந்து மும்பையில் உள்ளனர். அவர்கள் குற்றவாளிகளுடன் சென்னை வந்த பிறகே பாபுசிங் கொலையில் உள்ள மர்மங்கள் விலகும்.
Average Rating