கோவையில் அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்…!!
கோவை புதூரில் அரசு பஸ் ஒன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
கோவை புதூரில் இருந்து கணபதி நோக்கி இன்று ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் மாதவன் ஓட்டினார். பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் பஸ் வெரைட்டி ஹால் பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள வேக தடுப்பில் ஏறி இறங்கியது. அப்போது பஸ்சில் டிரைவர் இருக்கையின் அருகில் உள்ள என்ஜீன் பகுதியில் இருந்து திடீரென ‘குபு..குபு..’ என புகை வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டனர்.
இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். அப்போது பஸ் தீ பிடித்து எரிந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக தங்களது உடமைகளை எடுத்து கொண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பஸ்சில் என்ஜீனில் தீ பிடித்ததால் மற்ற பயணிகள், அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தண்ணீரை வாங்கி ஊற்றி அணைக்க முயன்றனர். அப்போது பஸ்சின் தீ வெப்பம் தாங்காமல் கண்ணாடிகள் உடைந்தன.
இதுபற்றி கோவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
பஸ் என்ஜீனில் இருந்த மின்வயர்கள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி உக்கடம் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ பிடித்த பஸ் கொண்டு செல்லப்பட்டது.
Average Rating