திருச்சி அருகே நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை..!!
திருச்சி மாவட்டம் ஜீய புரத்தை அடுத்த மேக்குடி கிராமம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 38). திருச்சியில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிவராமன் தனது மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மகாலட்சுமி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனாலும் சிவராமன் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மேக்குடி சுடுகாட்டு பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அருகில் ஏராளமான மதுபாட்டில்களும் கிடந்தன. அத்துடன் உடைக்கப்பட்ட மதுபாட்டிலால் சிவராமன் தலையில் குத்தப்பட்டு அதிலிருந்து ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் இருந்தது.
அவரை யாரோ கடத்தி வந்து கொலை செய்து சுடுகாட்டில் உடலை வீசிச்சென்றுள்ளனர்.
இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பார்த்தபோது அது சிவராமன் என்று தெரிய வந்தது.
மேலும் இதுபற்றி அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மகாலட்சுமி இறந்து கிடப்பவர் தனது கணவர் என கூறினார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி. கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் மகாலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், சிவராமனுக்கும் அவரது சித்தப்பா மகன் கிருஷ்ணமூர்திக்கும் நிலத்தில் வேலி அமைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating