படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: 7 பேர் நீரில் மூழ்கி சாவு…!!
அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்.
இந்த நிலையில் இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் உள்ள சிசிலி வளைகுடா பகுதியில் 550-க்கும் மேற்பட்டோர் ஒரு சிறிய படகில் இத்தாலி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். இந்த படகு திடீரென ஒரு பக்கமாக சாய்து மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உயிர் பிழைப்பதற்காக பலர் படகில் இருந்து குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி கடற்படை கப்பல் அதை பார்த்து விட்டது. உடனே கப்பலில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு மிதவைகளை பயணிகளை நோக்கி வீசினார்கள். அதை பிடித்துக்கொண்டு பலர் மிதந்தனர். கப்பலில் இருந்த மீட்பு படகுகளையும் உடனடியாக கீழே இறக்கி அங்கு சென்றனர்.
அதன் மூலம் அவர்களை ஒவ்வொருவராக மீட்டு கப்பலில் ஏற்றினார்கள். 562 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். மேலும் பலரை காணவில்லை. மிகச் சிறிய படகில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததால் அதை தாங்க முடியயாமல் படகு கவிழ்ந்தது தெரிய வந்தது.
படகில் வந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் லிபியா அல்லது துருக்கி நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Average Rating