மதுரையில் தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் மகன் உள்பட 2 பேர் கொலை…!!
மதுரை 92-வது வார்டு தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் உதயசூரியன். ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் குமார். இருவருக்கும் இடையே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது மோதி கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயசூரியன் மகன் முரளிக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு 11 மணி அளவில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் குமார் சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் முரளியும் சென்றார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர். இதில் முரளி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை வண்டியூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது58), பெயிண்டர். இவர் நேற்றிரவு வண்டியூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த லோகநாதன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வண்டியூர் பகுதியில் இருகோஷ்டியினர் கஞ்சா விற்று வந்ததில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டதாகவும், அதில் ஒரு கோஷ்டியினருக்கு லோகநாதன் ஆதரவு அளித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்கள் லோகநாதனை தீர்த்து கட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இத்தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Average Rating