சிலி நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை – தீ வைப்பு…!!
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடு சிலி. அங்கு மிச்செலி பாசலேட் அதிபராக பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு 2-வது தடவையாக அதிபரானார்.
அப்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதாக உறுதி அளித்திருந்தார். அதில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாகவும் அறிவித்து இருந்தார்.
ஆனால் அதை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இலவச கல்வி வழங்க வலியுறுத்தி தலைநகர் சாண்டியாகோவில் மாணவர்களின் போராட்டம் நடந்தது.
அப்போது பேரணி செல்லும் பாதையை போலீசார் மாற்றினர். அதனால் மாணவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது போலீசார் தங்களை தாக்கியதாக கூறி அவர்கள் மீது மாணவர்கள் கல்வீசி தாக்கினார்கள். அதை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவே மருந்துக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
வன்முறை அதிகமாகவே அதை கட்டுப்படுத்த மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரையும் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
இச்சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் பலியானார். புகை மூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலியானதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
Average Rating