தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்..!!
தந்தை உட்பட நண்பர்களால் 12 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம்; தப்பிச் சென்ற யுவதி பொலிஸில் முறைப்பாடு: சந்தேகத்தில் நால்வர் கைது-
நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான மகளை 12 வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த யுவதி கருவுற்றிருந்த நிலையில் அக்கருவை கலைப்பதற்கு முன்வந்த அவரது உறவினரான பெண்ணொருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதனையடுத்து ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ள யுவதியின் தாய் 12 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் அவர் ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறை தனது வீட்டுக்கு வந்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தனது தந்தையினால் தான் முதலில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்த தந்தையின் நண்பர்கள் சிலரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதேவேளை குறித்தபெண் வன்புணர்வினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்தரித்திருந்ததாகவும், மேற்குறிப்பிட்ட உறவினர் பெண்ணினால் கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தை உட்பட மற்றைய நபர்களினால் தான் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறித்த யுவதி வீட்டிலிருந்து தப்பிச் சென்று நிகவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
Average Rating