அநுராதபுரம், வர்த்தகரின் வீட்டினுள் நுழைந்த நபர்கள் துப்பாக்கி பிரயோகம்; சிறுமி காயம்..!!
அநுராதபுரம், கல்னேவ வலஸ்வெவ பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரது வீட் டினுள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரின் துப்பாக்கி பிரயோகத்தில் அந்த வர்த்தகரின் 11 வயதான மகள் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், இராணுவ சீருடையையொத்த உடையணிந்து வந்திருந்த நான்கு ஆயுததாரிகள் குறித்த வர்த்தகரின் வீட்டுக் குள் அனுமதியின்றி நுழைந்துள்ளனர்.
அவர்களை கண்டு அச்சமடைந்த அந்தவர்த்தகர் அறையொன்றினுள் சென்று தாளிட்டுள்ள நிலையில் கதவினை திறக்குமாறு அக்குழுவினர் அவ்வறையினை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அறையினுள் உறக்கத்திலிருந்த 11 வயதான சிறுமியின் காலில் காயமேற்பட்டுள்ளது.
இத்துப்பாக்கி பிரயோகத்தினால் அச்சமடைந்த வீட்டார் சத்தமிட்டதன் விளைவாக அயலவர்கள் அனைவரும் வர்த்தகரின் வீட்டை நோக்கி விரையவே சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் பத்மசிறியின் மேற்பார்வையின் கீழ் மூன்று குழுக்கள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating