சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…!!
சத்தியமங்கலத்தை அடுத்த ஒட்டர்கரட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது35). இவரது மனைவி விஜயகுமாரி (30).
ரவிசந்திரன் சொந்தமாக ஐஸ் கம்பெனி நடத்தி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். அவரது கம்பெனியில் அங்காள பரமேஸ்வரி என்ற பெண்ணும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.அங்காளபரமேஸ்வரியும் திருமணமாகி கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். கள்ளக்காதலர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்தனர்.
இந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் விஷயம் ரவிச்சந்திரன் மனைவி விஜயகுமாரிக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கணவர் ரவிசந்திரனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி சம்பவத்தன்று சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்குய்யனூர் அருகில் உள்ள தோட்டத்தில் ரவிசந்திரனும், கள்ளக்காதலி அங்காள பரமேஸ்வரியும், ஒன்றாக விஷம் குடித்து மயங்கி விழுந்தனர்.
இதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். அங்காள பரமேஸ்வரி மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating