மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி பேசின்பிரிட்ஜ் பாலத்தில் இருந்து விழுந்த மாணவர் ரெயில் மோதி பலி…!!
புளியந்தோப்பு அன்சாரி தெருவைச் சேர்ந்தவர் அப்துல்சமது. இவரது மகன் முகமது ஆதில் (வயது19). பிளஸ்-2 முடித்துள்ளார்.
இவர் நேற்று இரவு தனது நண்பர் சூளை தட்டாங் குளத்தைச் சேர்ந்த கவுதமுடன் (19) மோட்டார் சைக்கிளில் பேசின்பிரிட்ஜ் ரெயில்வே பாலத்தில் சென்றார். வண்டியை கவுதம் ஓட்டினார்.
அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
அப்போது தண்டவாளத்தில் மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. ஒரு மரம் மீது விழுந்த 2 பேரும் அதன் கிளை உடைந்ததால் வேகமாக சென்று கொண்டிருந்த ரெயில் மீது விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்து முகமது ஆதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுதமுக்கு கால் துண்டானது. அவரது அலறல் சத்தம் கேட்டு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு சின்னப்பன் ஆகியோர் மேம்பாலத்தில் இருந்து கீழே பார்த்தனர்.
கவுதம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சை வரவழைத்துனர். அதில் கவுதமை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான முகமது ஆதில் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான முகமது ஆதில் அண்ணாசாலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்தார். தேர்வில் 690 மதிப்பெண் பெற்று இருந்தார். அவரை கல்லூரியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். அதற்குள் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகி விட்டார்.
Average Rating