கன்னிதன்மை நிரூபிக்க தவறியதால் திருமணமான 48 மணிநேரத்தில் மனைவியை விலக்கி வைத்த கணவன்..!!
மகாராஷ்டிராவில் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க தவறியதால் காப் பஞ்சாயத்தார் உத்தரவுப்படி புதிய மனைவியை திருமணமான 48 மணிநேரத்தில் கணவன் விலக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் சாதி பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் எந்த பிரச்னையாக இருந்தாலும் இந்த பஞ்சாயத்துகள் தீர்ப்பு வழங்கி வருகின்றன. போலீசார் பலமுறை வழக்குகள் பதிவு செய்த போதும் வடமாநிலங்களில் காப் பஞ்சாயத்துகள் ஒரு பிரதான பிரச்னையாகவே இருந்து வருகின்றன. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் புதுமண பெண் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க தவறியதால் திருமணமான 48 மணிநேரத்தில் கணவரால் விலக்கி வைத்துள்ள கொடூரம் நடந்துள்ளது. இதற்கும் காப் பஞ்சாயத்துதான் காரணம்.
கடந்த மே 22ம் தேதி நாசிக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இளம் ஜோடி ஒன்றுக்கு திருமணம் முடிந்துள்ளது. முதலிரவு முடிந்து மறுநாள் சடங்கின் போது மணமகன் வீட்டு பெண்கள் அந்த பெண்ணை கன்னித்தன்மை அற்றவர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக இந்த விவகாரம் காப் பஞ்சாயத்தார் வசம் சென்றது. இதையடுத்து காப் பஞ்சாயத்தார் அந்த திருமண உறவை முறித்து தீர்ப்பு எழுதி விட்டனர். இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் ரஞ்சனா, கிருஷ்ணா ஆகியோர் கூறுகையில், அந்த மணமகள் காவல்துறை பணிக்காக தயாராகி வருகிறார். இதனால் நீளம் தாண்டுதல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்ட பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக அவரது உடல் நிலையில் இயற்கையாகவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காப் பஞ்சாயத்தார் மற்றும் மணமகன் வீட்டாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளோம் என்றனர். இந்த சம்பவம் நாசிக் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating