முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது
கொழும்பில் தென் ஆப்ரிக்காவிற்கெதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குமார் சங்கக்காராவும் மஹில ஜெயவர்தனவும் உறுதியுடன் ஆடி, ஜோடியாக 624 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தனர். உலக டெஸ்ட் போட்டி வரலாற்றின் முந்தைய சாதனையான 576 ஓட்டங்களை இந்த ஜோடி முறியடித்தது.
தமது ஆட்டம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைவர் மஹில ஜெயவர்தன, முதலில் அவரும் சங்கக்காராவும் உறுதியாக ஆடி சதம் அடிக்க வேண்டும் என தீர்மானித்ததாகவும், பின்னர் ஒரு சாதகமான நிலை இருந்ததால் 500 ஓட்டங்கள் முன்னணி எடுக்க வேண்டும் என முடிவு செய்து ஆடியதாகவும் தனிப்பட்ட சாதனைக்காக யாரும் விளையாடவில்லை என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிலையில் உலகிலேயே மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட சாதனை மகிழ்ச்சியை அளித்தது என்றாலும் அணியுடைய வெற்றிதான் அனைவரின் மனதிலும் இருந்தது எனவும் மஹில ஜெயவர்தன கூறினார்.