வங்காளதேசத்தில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மகனின் கண்ணெதிரே போலீஸ் உயரதிகாரியின் மனைவி படுகொலை…!!
வங்காளதேசத்தில் இன்று காலை ஆறுவயது மகனின் கண்ணெதிரே போலீஸ் உயரதிகாரியின் மனைவியை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.
வங்காளதேசத்தின் துறைமுக நகரமான சிட்டகாங் பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாடும் தனிப்பிரிவு போலீசில் சூப்பிரண்டாக பணியாற்றியவர், பாபுல் அக்தர். தற்போது தலைநகர் டாக்காவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஹ்முதா அக்தர்(33).
இன்றுகாலை சுமார் 6.45 மணியளவில் மஹ்முதா அக்தர், தனது ஆறுவயது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மஹ்முதாவை வழிமறித்தனர்.
அவர்களில் ஒருவன் சிறுவனை தனியாக அழைத்து சென்றுவிட, மற்றவர்கள் மஹ்முதாவை கத்தியால் சரமாரியாக குத்தியதுடன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சிறுவனின் கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்துவந்த போலீசார் மஹ்முதாவின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். சிட்டாகாங் நகரில் போலீஸ் உயரதிகாரியாக பணியாற்றியபோது ஜமாத்துல் முஜாதிதீன் உள்பட பல்வேறு தீவிரவாத கும்பல்களின் பதுங்குமிடங்களை பாபுல் அக்தர் கண்டுபிடித்து, தீவிரவாதிகளில் பலரை கைது செய்தார்.
இதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் மஹ்முதா அக்தரை கொன்றிருக்கக் கூடும் என போலீசார் கருதுகின்றனர்.
Average Rating