கோவையில் 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர் கைது..!!
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 22–ந் தேதி மாயமானார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுக்கரையில் கூலி வேலை பார்க்கும் சேலம் ஓமலூரை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் மாணவியை காதலித்து வந்தது தெரியவந்தது.
மாணவியின் உறவினர் ஒருவர் மதுக்கரையில் வசித்து வருகிறார். அவரை பார்க்க சென்று வந்த போது இவருக்கும் வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்துள்ளார். இங்கே வசித்தால் பிரச்சினையாகி விடும் என கருதிய வாலிபர், காதலியை தனது சொந்த ஊரான சேலத்துக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் இருந்த மாணவியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது இந்திய தண்டனை சட்டம் 366(ஏ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இதையடுத்து மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவரை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
Average Rating