ரெயில்களில் குழந்தைகள் உணவு விற்பனை கட்டாயம்: புதிய திட்டம் இன்று முதல் அமல்..!!
ரெயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் நலனுக்காக, ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அவர் அறிவித்தார். அதன்படி, ‘ஜனனி சேவா’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டம் இன்று அமலுக்கு வருகிறது. டெல்லியில் நடக்கும் விழாவில், இத்திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கிவைக்கிறார்.
திட்டத்தின்படி, சில குறிப்பிட்ட ரெயில்களிலும், நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடைகளிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்பனை கட்டாயம் ஆக்கப்படும்.
பேபி புட்ஸ், சூடான பால், வெந்நீர் உள்ளிட்ட குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். மேலும், சில குறிப்பிட்ட ரெயில்களின் சமையல்கூட பெட்டிகளில், கேக், பிஸ்கட், சிப்ஸ், சாக்லேட் உள்பட குழந்தைகள் விரும்பும் அனைத்து தின்பண்டங்களும் விற்பனைக்கு கிடைக்கும்.
Average Rating