இதயத்தில் ஓட்டை விழுந்து பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உதவிபெற்ற ஆறுவயது சிறுமி..!!
மராட்டிய மாநிலத்தில் இதயத்தில் ஓட்டை விழுந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆறுவயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உதவி பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவள் வைஷாலி யாதவ். ஆறுவயது சிறுமியான இவளுக்கு பிறப்பின்போதே இதயத்தில் ஓட்டை இருந்ததால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தாள். பகுதிநேர பெயிண்டராக வேலை செய்துவரும் வைஷாலியின் தந்தையால், குடும்ப செலவுகளையும் கவனித்து கொண்டு, மகளின் வைத்திய செலவுக்கு தேவையான பணத்தை திரட்டுவது சிரமமாக இருந்தது.
இந்நிலையில், தனது வீட்டில் ஒருநாள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்து கொண்டிருந்த வைஷாலி, அதில் பிரதமர் மோடி பலருக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதை கண்டாள். உடனடியாக, தனது பள்ளியில் வழங்கப்பட்ட இரண்டாம் வகுப்புக்கான அடையாள அட்டையின் நகலுடன் தனது நிலையை விளக்கி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினாள்.
ஒருவாரத்துக்கு பின்னர், வைஷாலிக்கு தேவையான உதவிகளை செய்துதரும்படி டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருந்து புனே மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து, பிரதமரின் தனிச் செயலாளர்களில் ஒருவர் மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
கடந்த 2-ம் தேதி இங்குள்ள ரூபி ஹால் கிளினிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வைஷாலிக்கு கடந்த 4-ம் தேதி இதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கும் இலவச ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது உடல்நிலை தேறிவரும் வைஷாலி நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவளுக்கு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating