காதலனை திருமணம் செய்த 17 வயது சிறுமியை எரித்துக் கொன்ற பாக். தாய்…!!
பாகிஸ்தானில் தனக்கு பிடித்த நபரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமியை அவரது தாயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் ஜீனத் பீபி(17). அவர் மெக்கானிக்கான ஹஸன் கான் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி ஹஸனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் பிடிக்காத ஜீனத்தின் குடும்பத்தார் ஹஸனை தொடர்பு கொண்டு பேசினர். வீட்டிற்கு ஜீனத்தை அனுப்பி வைக்குமாறும், தாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் நைசாகப் பேசி ஹஸனை ஏமாற்றினர். அவர்களின் பேச்சை உண்மை என நம்பிய ஹஸன் தனது மனைவி ஜீனத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு சென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறி அழுத ஜீனத்தை ஹஸன் சமாதானம் செய்தார். இந்நிலையில் ஜீனத்தை அவரது தாய் பர்வீன் நேற்று முன்தினம் கட்டிலில் கட்டி வைத்து பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டார்.
மகளை கொன்றதும் பர்வீன் தெருவுக்கு ஓடி வந்து தனது குடும்ப பெயரை கெடுத்த மகளை கொன்றுவிட்டதாக சப்தமாக கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்வீனை கைது செய்தனர். மேலும் ஜீனத்தின் சகோதரர் உள்பட 3 ஆண்களை தேடி வருகிறார்கள்.
Average Rating